திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் போற்றிகள் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!
ஒளியாகி அண்டமெல்லாம் நிறைந்திருப்பவன் திருவடி வணங்குவோம்!
எங்கும் நிறைந்திருப்பவன்
சிவாய நம இறைவனின் பெருமையை உணர்ந்து அவரைப் போற்றித் துதிக்கும் பொழுது நம் அகத்தில் இருக்கும் இறைவன் உளம் மகிழ்கிறான். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைப் போற்றி இருக்கும் வார்த்தைகளைக் கொண்டு ஒளியாகி எங்கும் நிறைந்திருப்பவனைப் போற்றுவோம்.
- ஆதி பகவன் தாள் போற்றி - முதன்மையானவன் திருவடிகள் போற்றி
- வாலறிவன் நற்றாள் போற்றி - பரிசுத்தமானவன் திருவடிகள் போற்றி
- மலர்மிசை ஏகினான் மாணடி போற்றி - எங்கும் நிறைந்திருந்தாலும் தாமரை மலர் போல் உயர்ந்து தனித்திருப்பவன் தாள் போற்றி
- வேண்டுதல்வேண் டாமை இலானடி - விருப்பு வெறுப்பு அற்றவன் திருவடி போற்றி
- இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் மாட்டு (திருவடி) போற்றி - பிறப்பு இறப்பு நன்மை தீமை இல்லாதவன் திருவடி போற்றி
- ஐந்தவித்தான் தாள் போற்றி - நம் ஐம்புலன்களின் அர்ப்பணிப்பை ஏற்று மாயையில் இருந்து விடுவிப்பவன் தாள் போற்றி
- தனக்குவமை இல்லாதான் தாள் போற்றி - இறைவனுக்கு சமமான, ஒப்புமையாக, இணையாக இல்லாதவன் தாள் போற்றி
- அறவாழி அந்தணன் தாள் போற்றி - எல்லையற்ற கடலைப் போன்ற அருளை பொழிபவன் தாள் போற்றி
- எண்குணத்தான் தாள் போற்றி - இரு வினைகளையும் அழித்து பரிசுத்தமாக்குபவன் தாள் போற்றி (எண் என்றால் அழிப்பவன் என்றும் தமிழ் அகராதியில் பொருள் உள்ளது. வண்ணான் வெளுத்த உருப்படி என்றும் பொருள் உள்ளது)
- இறைவனடி போற்றி - பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் எந்த உருவில் வேண்டுமானாலும் குருவாக வரும் ஞான ஆசிரியர் தாள் போற்றி (இறைவன் என்பதற்கு குரு என்று ஒரு பொருள் தமிழ் அகராதியில் இருக்கிறது)
திருவள்ளுவர் பெருமான் திருவடிகளை வணங்கி மேலே உள்ள போற்றிகளை தினமும் சொல்லி இறைவனை வணங்குவோம்! பிறவித்துயர் நீங்கி நிலைத்த ஆனந்தம் பெறுவோம்!
சிவாய நம! அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!



அருமை அம்மா.
ReplyDelete